யுத்தப்பிரசங்கி யாண் முரே - நூலால் நீதியை
ஒலிக்கச் செய்ய வேண்டும்!
சனவரி – மார்ச் 2017, “செய்தி மலர்” வாசித்தேன். இரட்சண்ய சேனை
சபைகளில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் ஒரு இதழாக அவ்விதழ் வலம் வருவதனை
காணமுடிந்தது. இப்படிப்பட்ட இதழ் ஒவ்வொரு சபைகளுக்கும் தேவையான ஒன்றாகும். இயேசு, இப்படிப்பட்ட தவறுகளைத்தான்
சுட்டிக்காட்டினார். இதற்கு சபை போதகர்கள் பல எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள்.
அதனையும் மீறி இன்னொரு இயேசுவாக வாழ்ந்து காட்டுவதே உண்மையான கிறித்தவ வாழ்வாக
அமைய முடியும். அவ்வகையில் இவ்விதழை நடத்தும் பொறுப்பாளர்களை பாராட்டுகிறேன்.
வில்லியம் பூத்தின் பெயரைச்சொல்லி
பிழைப்பு நடத்திவரும் சில வியாபாரிகள் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது இரட்சண்ய
சேனை நிர்வாகம். இந்த தவறான அணுகுமுறையால், கொள்கை முரண்பாடுகளால்
சேனையின் அடிப்படை நோக்கத்திற்கும், அதன் நற்பெயருக்கும்
அவமானத்தை ஏற்படுத்திவரும் சுயநலக் கூட்டத்தின் இரட்டை வேடத்தை மக்கள்
மன்றத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கும், மனித நேயம்கொண்ட சில
அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும்
உறவுப் பாலத்தை ஏற்படுத்தி முத்திரை பதிப்பதுதான் இச்செய்தி மலர். தொடர்ந்துவரும்
இவ்விதழ் அங்கத்தினர்களுக்கு மட்டும் உரியது என பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும்
அங்கத்தினராக இல்லாதவர்களுக்கு இச்செய்தி மலரைக் கொடுத்து வருகிறார்கள் என்பது
சிறப்புக்குரிய செய்தி.
13.11.2016 அன்று கோட்டூர்கோணம்
இரட்சண்ய சேனை சபை மக்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்ட ஆலய மணிக்கூண்டு அபிசேக
விழாவின்போது வருகை தந்த தென்கிழக்கு மாகாண தளபதி எட்வின் மசியை வரவேற்க மேளதாளம், வாணவேடிக்கை முழங்க
குலசேகரம் பேருந்து நிலையம் சென்று ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர் இரட்சண்ய சேனை
சபை மக்கள்.
கோட்டூர்கோணம் கத்தோலிக்க ஆலயம்
அருகில் ஊர்வலம் வரும்போது கத்தோலிக்க பங்குப் பணியாளர் சுரேசு ராசு தலைமையில்
பங்குப் பேரவையினர் நேரியல் அணிந்து எட்வின் மாசிக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.
இது பிளவுபட்டிருந்த இரு சபை மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்கும் ஊக்க மருந்தாக
இருந்தது என்றும், பல இலட்சம்
பொருட்செலவில் உயர்ந்த கோபுரம் கட்டி திறக்கப்பட்டதைவிட இருதரப்பு மக்களும் உணர்வு
பூர்வமாய் கரம் கோர்த்ததே சிறப்புமிக்கது என்றும் இன்ப இயேசுராசன் எழுதியிருக்கிறார்.
இரு பிரிவினைவாதிகள் ஒன்று சேர்வது
நல்ல செய்தியாக இன்ப இயேசுராசனுக்கு தெரியலாம். அது இன்பமாகவும் அவருக்கு
இருக்கலாம். இருப்பினும் இவ்விரு பிரிவினைவாதிகள் (கத்தோலிக்க சபை & இரட்சண்ய சபை) ஒருபோதும்
ஒன்றாக முடியாதே என்பது இயேசு இராசனுக்குத் தெரியாததுதான் விசேசம். இவ்விரு சபைகளும்
ஒன்றாக இயலாதபோது, அச்சபை
மக்களும் ஒன்றாக இயலாது அல்லவா?
ஆலய மணிக்கூண்டு என்கிற பெயரில் பல
லட்சம் பணம் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என்பது கூர்ந்து நோக்கத்தக்கது.
இயேசுவுக்காக வாழ்வதாகச் சொல்லும் ஒருவரை வரவேற்க மேளதாளம், வாணவேடிக்கை என பணத்தை
விரயம் செய்தது ஆன்மீக சித்தாந்தத்திற்கு விரோதமானது. இயேசு இப்படிப்பட்ட
ஆடம்பரங்களை விரும்பியதில்லை.
ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்கும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள பணியாளர் ஒருவர் இரட்சண்ய சேனை சபையில்
நடக்கும் இப்படிப்பட்ட ஆடம்பரங்களை ஊக்கப்படுத்த வந்ததாகவே பார்க்க முடிகிறது.
ஆடம்பரத்திற்கு பணம் வேண்டுமென்றால் அது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும்.
வரி என்கிற பெயரில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இச்சுரண்டல் எல்லா ஆலயங்களிலும்
நடைபெற வேண்டுமென போதகர்கள் விரும்புகிறார்கள். ஒரு மீன் சந்தையில் மீன் விலை
குறைவாக இருந்தால் மக்கள் அந்த கடைகளுக்கு செல்லத் துவங்கி விடுவார்கள் அல்லது
கேள்வி கேட்கத் துவங்கி விடுவார்கள். இதனைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த
ஊக்குவித்தல் நடை பெற்றிருப்பதாக அடியேன் பார்க்கிறேன்.
20.11.2016 அமைப்புத் தலைவர் யுத்தப்
பிரசங்கி யாண் முரே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இரட்சண்ய சபை மாணவர்
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை சித்ரவதை செய்த நிகழ்வுகளையும், விடுதிக் காப்பாளரின் மனித
நேயமற்ற செயல்களையும் அலசியிருக்கிறீர்கள். அச்செய்தி, நாட்குறிப்பில் தெளிவாக சொல்லப்படவில்லை.
நாட்குறிப்பில் அச்செய்தி சுருக்கமாக இருந்தாலும் பொதுத்தளத்திற்கு அச்செய்தியைக்
கொண்டு வரும்போது அதனை சற்று விரிவாக வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும். விடுதிக்
காப்பாளரின் பெயரை சுட்டிக் காட்டியிருக்கலாம். புகைப்படத்தையும்
வெளியிட்டிருக்கலாம்.
அநீதிகளை தடுக்கும் ஒரு கருவியானது நடக்கிற
நிகழ்வுகளை சபை மக்களுக்கு தெளிவாக சொல்வதில்தான் அடங்கி இருக்கிறது. நடவடிக்கை
எடுக்கத் தயங்கும் மாகாண தளபதியின் புகைப்படத்தையும், பெயரையும்
வெளியிட்டிருக்கலாம். தவறு செய்பவர்களின் பெயரும், புகைப்படமும் செய்தி மலரில்
வெளிவரும் என்கிற ஒரு பயத்தை உருவாக்கலாம். அதுதான் செய்தி மலருக்கான வெற்றியாக
இருக்க முடியும்.
ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு
வருகின்ற நிதி உதவியை பிரிவு செயலாளர் தனது சுய தேவைக்கு பயன்படுத்தினார் என்கிற
செய்தியிலும், ஏழைப்
பெண் திருமண நிதி காணிக்கை என்ற பெயரில் கட்டாய வசூலாக ரூ 2000/- வரை வசூலிக்கப்படுகிறது
என்கிற செய்தியிலும், பிறந்த
குழந்தைக்கும் ரூ 500/- வழங்க காகித உறை வழங்கி வசூல் வேட்டை நடத்தப்படுகிறது என்கிற
செய்தியிலும் கயவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் போலி முகமூடிகளின்
கவசம் கிழிக்கப்படாமலே நகர்ந்து செல்கிறது. அவர்களது பெயரை குறிப்பிட்டு
எழுதுவதற்கான மன தைரியம் இன்னும் வரவில்லையோ என்று கருதவே தோன்றுகிறது.
“2015 வருட தென்கிழக்கிந்திய
மாகாண தன்னை ஒறுத்தல் நிதி வசூல் ஒரு கண்ணோட்டம்” என்கிற தலைப்பில் சபையின்
மொத்த வருமான பட்டியல் ரூ 1,54,55,165/- என்கிற விவரச் செய்திகள் மூலம் சபையில் என்ன நடக்கிறது
என்பதனைக் குறித்து சிந்தித்துணர சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.
உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். அதன் செலவு விவரத்தை மக்கள் கேள்வி கேட்டுப் பெற
வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுதான் சபையின் வளர்ச்சியை
அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும்.
சபை உறுப்பினர்கள் கேள்வி
கேட்கும்போது, அதற்குரியப்
பதிலை அளிக்காமல் கொலை மிரட்டல்விடும் அளவிற்கு திருச்சபைகள் வளர்ந்துள்ளது
என்பதனைப் பார்க்கும்போது திருச்சபையின் போக்கு திருந்தியவர்களின் குரலாக கேட்க
முடியவில்லை. தெருப் பொறுக்கிகளின் கைகளில் திருச்சபைகள் மாட்டி விட்டதையே காண
முடிகிறது. இதைத்தான் ஆசிரியர் மாத்தூர் இ. ஞானதாசு, “பலருடைய வாழ்வுக்குரிய
செல்வங்கள், சிலருடைய வாழ்வுக்கு மட்டும் பயன்படுவது வேதனை” என வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில்
ஆதங்கத்தை வெளியிடுகிறார். காவல்துறை அதிகாரிகள் சிலரும் இப்படிப்பட்ட
கயவர்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்கை பதிவு செய்ய மறுப்பது
சனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்குகிறது.
ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ 10 கோடி வெளிநாட்டு பணம்
மாகாணத்திற்கு வருகிறது. குறைந்த பட்சம் ஒரு கல்லூரிகூட கட்டவில்லையே என்கிற இன்ப
இயேசுராசனின் ஆதங்கம் நியாயமானதே. தன்னை ஒறுத்தல், அறுப்பு – 2, திருமண நிதி, வீட்டுச் சங்கம், கருணை சங்கம், இளம் வீட்டுச் சங்கம், சகாயிக்கும் கரம் என்கிற
பெயர்களில் இரட்சண்ய சேனை உறுப்பினர்களிடமிருந்து காணிக்கை வசூலிக்கப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு வழக்குகள் வரும்போது நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி காணிக்கை
வாங்குவதில்லை. அவர்கள் மனமுவந்து கொடுக்கும் காணிக்கைகளையே வாங்கிக் கொள்கிறோம்
என்றும், அக்காணிக்கைகளை
அவர்களே நிர்வகித்து வருகிறார்கள் என சொல்லுகிற வித்தை வியப்பானது.
இரட்சண்ய சேனை அமைப்பின் செயலாளர்
டேவிட்சன் வர்க்கீசு 06.04.2011 அன்று நிறுவனப் பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில் எங்கள்
நிறுவனத்திற்கு சொந்தமானதும், நிர்வகித்து வருகிறதுமான ஆலயங்களில் உறுப்பினர்களாக
இருப்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் அல்ல; அவர்கள் அந்நியர்கள் என
குறிப்பிட்டுள்ளார். இயேசுவை, பிலாத்து கைகழுவியதுபோல் கைகழுவும் நிகழ்வுகள்
சபைகளில் நடப்பது புதிதல்ல. மக்கள்தான் இன்னும் குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
இரட்சண்ய சேனையின் நிறுவனர்
வில்லியம் பூத், “மத
நம்பிக்கையில் நாம் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால், அடுத்த அடி சேவையாக இருக்க
வேண்டும்” என்கிறார்.
இரட்சண்ய சேனையின் தற்போதைய தலைவர் ஆன்டரே காக்சு, “நாம் ஆராதிக்கிற
கிறித்தவர்களாக மட்டும் இருந்தால் அழிந்து போவோம். சேவை செய்கிற கிறித்தவம்
மட்டுமே நிலைக்கும்” என்கிறார்.
அவர்களுடைய வாக்குகள் உயிருள்ளவையாக மாறவில்லையே என்கிற ஆதங்கத்தை யுத்தப்
பிரசங்கி யாண் முரே கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏன் என் தந்தையின் ஆலயத்தை
வியாபாரக் கூடாரமாக ஆக்குகிறீர்கள் என்று இயேசு ஆயுத சாட்டை ஒன்றினைத் தயாரித்து
அவர்களை விரட்டி அடித்து கோவிலை சுத்தம் செய்ததுபோல் இரட்சண்ய சேனை மக்கள்
அவ்வேலையை அவ்வாறாக செய்ய இயலாது. இயேசு வாழ்ந்த காலம் வேறு; நீங்கள் வாழுகிற
காலம் வேறு. யாருடைய சட்டையையும் யாரும் பிடித்து கேள்வி கேட்க இயலாத நிலையில்
மக்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அரசின் அடக்குமுறைகள் அடவாடித்தனமாக
நடக்கிறது. பணம் கொழுத்த முதலைகளுக்கு பக்கபலமாகவே அரசு இயந்திரங்கள் உட்கார்ந்து
இருக்கிறது. காவல்துறையும் நீதிக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயுதமாக செய்தி மலர் என்கிற
இதழ் பெரியளவில் மாறிவிடவும் இல்லை. இப்படிப்பட்ட விசயங்களை இன்னும் ஆழமாக, ஆதாரப்பூர்வமாக
நூல் வடிவில் வெளியிடுங்கள். நூல்கள்தான் உண்மையை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும்
அம்பலப்படுத்தும். அதிகபடியான தாக்கத்தை சபை மக்கள் மத்தியில் உருவாக்கும்.
இதழ்கள் காணாமல் போகும். ஏன் வாசிக்கப்படாமலும் போகலாம். நூல்கள் மிகப் பெரியளவில்
தாக்கத்தை உருவாக்கும் என்பதால் யுத்தப்பிரசங்கி யாண் முரே, நூல் ஆயுதத்தால்
நீதியை ஒலிக்கச் செய்ய முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment