Tuesday, August 28, 2018

கு. பச்சைமால்


தமிழ்ப் புலவர் கு. பச்சைமாலின்
திராவிடம் தமிழாகினும் தமிழராகாது!

வணக்கம்! தாங்கள், தமிழாலயம் அமைப்பின் இயக்குநராக இருந்து தமிழுக்காக திறம்பட செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை குமரி மண்ணில் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் பலர் அறிந்திருக்கிறார்கள். என்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது, “இவர் என் இனிய நண்பர்; தமிழ் ஆர்வலர்” என்பீர்கள். அந்தவகையில் நானும் ஒரு தமிழ் அறிஞரோடு கைகோர்த்து நடந்தேன் என்கிற மகிழ்ச்சி அடியேனுக்கு உண்டு.

தங்களிடம் ஏதாவது ஒரு நூலை பெயர் சொல்லி கேட்கும்போது, ‘தம்பி! உங்களுக்கு இல்லாததா? என்று மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வாசிக்கத் தந்திருக்கிறீர்கள். சில நூல்களை அன்பளிப்பாகவும் தந்திருக்கிறீர்கள். வயது வித்தியாசம் பாராமல் என்னோடு நட்பாக பழகியிருக்கிறீர்கள். அந்தவகையில் அடியேனுக்கு தங்களிடம் எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. தங்கள் அமைப்பின் செயலாளர்களாக இருக்கும் வழக்கறிஞர் இல. தெய்வனாயகப் பெருமாள் மற்றும் நா. இனியன் தம்பி ஆகியோரும் அடியேனுக்கு நல்ல நண்பர்கள்தான்.

ஆந்திரம் நடத்திய தமிழ் இனப் படுகொலைக்கு எதிரான கண்டனக் கூட்டம் கோட்டாறு இராசகோகிலம் அரங்கில் 15.04.2015 அன்று புதன் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதான அறிவிப்புச் செய்தி ஒன்றினை தங்கள் அமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் இல. தெய்வனாயகப் பொருமாள் 12.04.2015 அன்று மாலை 7.30  மணிக்கு நாகர்கோவில் அலெக்சாந்தர் அச்சகச் சாலையில் வைத்து என்னைப் பார்த்தபோது கொடுத்தார். அதனைக் கொடுத்த அவர், ‘கூட்டத்திற்கு கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்றார்.

அவர் கொடுத்த அறிவிப்பை வாசித்துப் பார்த்தேன். அதில், ஐந்து தீர்மானங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த ஐந்து தீர்மானங்களையும் தாங்கள் கோட்டாறு இராசகோகிலம் அரங்கில் வைத்து வாசித்து தீர்மானம் நிறைவேற்றப் போவதாக இருந்தது. அதில், மூன்றாவது தீர்மானம், திராவிட கட்சிகள் தங்கள் கட்சி பெயர்களில் திராவிடம் பெயரை நீக்கிவிட்டு தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கழகம் என்றால் சூதாட்டம் என்று பொருள்படும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு ஒருமுறை சொன்னார். அது பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அப்பெயரை மாற்றச் சொல்லியிருக்கலாம்.

தாங்களோ, ‘திராவிடம் என்கிற வார்த்தையை, ‘தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்கள். இதனுள் உட்புதைந்து கிடப்பதோ தமிழனைத் தவிர வேறு எவரும் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரக்கூடாது என்பதுதான் தங்களின் எண்ணமாக இருக்கும். தமிழர் காமராசர் போன்று ஒருவர் வந்துவிடக் கூடாதா என்கிற ஆதங்கமும் தங்களுக்கு இருந்திருக்கலாம். அப்படி என்றால் வைகோ, விசயகாந்த், கருணாநிதி ஆகியோரை இனிமேல் தாங்கள் எந்தவொரு மேடையிலும் புகழ்ந்து பேச மாட்டீர்கள் என நம்புகிறேன். இனிமேல் தெலுங்கர்களின் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரும் தமிழாலயம் அமைப்புக் கூட்டத்திற்கு வரக்கூடாதென அறிவிப்பு விடுப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

தமிழுக்காக, தமிழருக்காக பேசும் தாங்கள் எழுதி வைத்திருக்கிற தீர்மானத்தில் ஆங்கிலத்தை கலந்து எழுதியிருக்கிறீர்கள். அது அடியேனுக்கு வருத்தமாக இருந்தது. தாங்கள் வாசிக்க இருக்கும் முதல் தீர்மானத்தில், ஆந்திர அரசை சனாதிபதி, ‘டிசுமிசு செய்ய வேண்டும் என்கிறீர்கள். ‘டிசுமிசு என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா? உங்களுடைய இரண்டாவது தீர்மானத்தில், தேர்தல்களில் பிற மாநிலத்தவருக்கு, ‘டிக்கட் கொடுக்கக்கூடாது என்கிறீர்கள். டிக்கெட் என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா? அழைப்பிதழில் பெயர்களுக்கு முன்னால் ‘டாக்டர் எனக் குறிப்பிடுகிறீர்கள். திராவிடக் கட்சிகள், தங்கள் கட்சிப் பெயர்களில்,  ‘திராவிடம் என்ற பெயரை மாற்றித் ‘தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லும் தாங்கள் ஆங்கிலத்தை கலப்பது முறையாகுமா என்பதனையும் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

தெலுங்கர்கள், தங்கள் கட்சியின் பெயரில், ‘திராவிடம் என்கிற வார்த்தையை மாற்றித் ‘தமிழ் என்று பெயர் வைத்தால் அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுடைய நான்காவது தீர்மானத்தில், தமிழ்நாட்டில் தெலுங்கரின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் பொருள் என்ன? ‘தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்தவர்களை ஏற்றுக் கொள்வது தங்களின் தமிழ் கொள்கை அடிப்படையிலோ அல்லது தமிழ் தேசியத்தின் அடிப்படையிலோ சரியாக இருக்கக்கூடுமா? அது எந்தவகையில் நியாயமானதாக இருக்கக்கூடும்? என்பதனை தாங்கள்தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு, இந்திய தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. நமது மாநிலத்தை ஓட்டியுள்ள ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் இனி தமிழகத்திற்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்று சொல்வீர்களா? 20 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தெலுங்கர்கள்மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது எந்தவிதத்தில் நியாயமாக இருக்க முடியும்?

தமிழ் மொழியின் பிள்ளைகள்தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு எனப் பெருமைப் பாராட்டுகிறார்கள். தமிழர்கள் அப்படிப்பட்ட நிலையில் தெலுங்கர்களின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டுமென சொல்வது எந்தவிதத்தில் சரியானதாக இருக்கும்? ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் அன்பை விதைப்பதற்குப் பதிலாக மக்கள் மத்தியில் வம்பை விதைக்க ஆசைப்படுகிறீர்கள். தமிழ் பற்றாளராக இருக்க வேண்டும்  என்பதற்குப் பதிலாக அனைவரும் தமிழ் வெறியர்களாக இருக்க வேண்டுமென நினைகிறீர்கள். இது, மனிதரை மனிதருக்கு எதிராகத் தூண்டிவிட்டு கலரவத்தை உருவாக்கும் செயலாகும்.

‘திராவிடம் என்கிற வார்த்தைக்கே. ‘தமிழ் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் போட இருக்கும் தாங்கள் அரபிப் பெயருடைய இசுலாமியர்களையும், ஆங்கிலப் பெயருடைய கிறித்தவர்களையும் அதே அரங்கில் கனல் உரைவீச்சு நிகழ்த்த அழைத்திருக்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

தமிழர்கள், தமிழில் பெயர் சூட்ட வேண்டும். பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ 450/- க்குப் பதிலாக ரூ 50/- செலுத்தினால் போதுமென அன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆணை பிறப்பித்தார். பலர் தங்கள் பெயர்களை தமிழில் மாற்றிக் கொண்டார்கள். தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தனது கட்சி உறுப்பனர்களின் பெயரை தமிழில் மாற்றுவதற்கு கூட்டம்போட்டு அதனை நிறைவேற்றினார். தீர்மானத்தை கொண்டுவந்த கருணாநிதி தனது மகன், ‘சுடாலின் என்கிற பெயரை தமிழில் மாற்றாமல் வியாக்கியானம் செய்தார். அதுபோல் தங்கள் அமைப்பும் மாறிவிடுமோ என்கிற ஐயப்பாடு அடியேனுக்கு எழுகிறது.

தமிழ் மொழியை காதலிக்கும் தாங்கள் அரபி, ஆங்கிலப் பெயர் உடையவர்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமென அரங்கில் அழைப்பு விடுப்பீர்களா? அவர்கள் தங்கள் பெயர்களை மாற்ற முன்வரவில்லை என்றால் தமிழாலயம் அரங்கில் அவர்களை உரைவீச்சு நிகழ்த்த இனிமேல் அழைக்கா மாட்டேன் என அறிவிப்புச் செய்வீர்களா? உங்கள் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துவீர்களா? உங்களால் தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும் என்பது அடியேனின் அவா. அது நடப்பது உங்கள் செயல்பாட்டில்தான் உள்ளது. அதனைக் குறித்து சிந்திக்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment