Tuesday, August 28, 2018

கீழப்பாவூர் ஆ. சண்முகையா


கீழப்பாவூர் ஆ. சண்முகையாவின், திருமந்திரம் தமிழ் அமுதம் வெளியீட்டிற்கு வருகிறவர்கள் கற்கிற கூட்டமல்ல!

கீழப்பாவூர் ஆ. சண்முகையா எழுதிய, “திருமந்திரம் தமிழ் அமுதம் – முதல் மந்திரம் ஓர் அறிமுகம்” என்கிற நூலை வாசித்தபோது திருமந்திரத்தின் மகத்துவத்தை உணர முடிந்தது. இன்னும் ஆழமாக அறிய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.

இந்த உலகத்தில் அருளாளராக வாழ்ந்தவர் திருமூலர். அழுக்காறு, ஆசைகளை முற்றிலுமாகக் களைந்தவர். அப்படிப்பட்ட தனக்கு மீண்டும் ஒரு பிறப்பு அருளப்படுவது ஏனோ என கடவுளிடம் முறையிடுகிறார். அதற்கு கடவுள், “நீ வினை தீர்க்க பிறக்கவில்லை! நீ தமிழ் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பிறப்பெடு!” எனப் பணிக்கிறார். அவ்வாறாக, தமிழ் மொழியில் இறக்கிவைக்கப்பட்ட தெய்வீக நூலை தமிழ் மொழி தெரிந்தவர்கள் வாசிக்காமல் இருப்பது பேரின்பத்தை அறிந்துகொள்ள விரும்பாததையே காண்பிக்கிறது.   

கடவுளின் அருளால் மனிதப் பிறப்பெடுத்தவர் திருமூலர், ஓராண்டு முழுவதும் ஒரு மந்திரத்தை ஓதி, அப்படியே மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் மந்திரங்கள் ஓதியதே திருமந்திரமாக அறியப்படுகிறது. ‘மூலன் தமிழ் செய்த மூவாயிரம் தமிழ்’ என்பதால் இந்நூலுக்கு தமிழே மந்திரமாக அறியப்படுகிறது. அந்த மந்திரங்களுக்கு திருமூலரே, ‘தமிழ்’ என பெயரிட்டிருப்பது சிறப்புதலுக்கு உரியதாகிறது.

முதல் தந்திரத்தில் முதலில் இடம்பெறுவது, ‘உபதேசம்’. குழந்தைக்கு தாய், தகப்பனார் கூடவே இருந்து விளக்குவதுபோல் குரு ஒருவர் சீடருக்கு கடவுளை விளக்குவதே உபதேசம். நல்ல பாத்திரத்தில் பசும்பாலை வைக்கவில்லை என்றால் அது திரிந்துவிடும். பால், நல்ல பால்தான். பாத்திரத்தின் குற்றத்தால் பயனற்றுப் போகிறது. மனிதர்கள் நல்லவர்கள்தான். அவர்கள், மும்மல மயக்கத்தால் நிலை திரிந்து போகிறார்கள். அம்மலம் நீங்கி ஞானம்காண திருமந்திரத்தின் சிறப்பு இந்நூல் வாயிலாக முன்னிறுத்தப்படுகிறது.

உடம்பு, உயிரைப் பற்றிப்பிடித்து பிறப்பதற்குக் காரணம் வினைப் பயனே. எல்லா உயிர்களும் ஒன்றே. உடல் என்பது செய்த வினைகளின் வடிவம். உயிர் அழியாததுதான். ஆனால் அவை கடவுளாக முடியாது. உப்பின் பிறப்பிடம் நீராக இருந்தாலும் உப்பும் நீரும் ஒன்றல்ல. அதுபோல உயிர் வேறு; கடவுள் வேறு, உடலை பிறவிப் பயனுக்கேற்ப அமைக்கும் கடவுள், உயிரைப் படைப்பதில்லை. எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் ஆண்டாண்டு காலம் நிலைக்கக்கூடிய அழியாத மெய்யியல் தத்துவம் இதுதான். ஏனைய மதங்கள், விஞ்ஞானம் வளரவளர அழியக்கூடியவையே.

‘உள்ளத்தை தகுதியாக்க மூன்று வழிமுறைகள்’ என்கிற தலைப்பில், நமக்கு அதிகமாக இருக்கும் செல்வம், மற்றவர்களின் பசியைப் போக்குவதற்குப் பயன்பட வேண்டும் என்கிறார். மற்றவர்களுக்கு பகிர்ந்து  கொடுக்காமல் தான் மட்டும் சேர்த்து வைத்துக்கொண்டு வாழ்வதும் ஒருவகையில் உயிர்க் கொலைதான். என கீழப்பாவூர் ஆ. சண்முகையா கருத்தினை முன்வைக்கிறார். உண்ண உணவு கிடைத்தால் காகம் தான் மட்டும் உண்பதில்லை; கூவி அழைத்து சேர்ந்தே உண்ணும். அதனால்தான் இயேசு, ‘ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வந்தர்கள் பரலோக உலகில் நுழைய முடியாது’ என்றார். ஏனெனில் வசதியுள்ளவர்கள் பல உயிர்க் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். மாடமாளிகைகளில் வாழும் போதகர்களும், துறவிகளும் உயிர்க் கொலைகளை தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெண் பறவை முட்டை இடுகிறது. ஆண் பறவை துணை நிற்கிறது. குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறிய பிறகு தாய்ப் பறவை தனியே, ஆண் பறவைத் தனியே, குஞ்சுகள் தனியே என பிரிந்து அதனதன் பாதையில் பயணிக்கத் துவங்கி விடுகின்றன. மனிதன் மட்டுமே தன் பிள்ளை, தன் வீடு, தன் வருமானம் என சுற்றித் திரிகிறான். தான் உழைத்து வளர்த்த குஞ்சுகள் இப்படி ஆகிவிட்டனவே என்று அவைகள் வருத்தப்படுவது இல்லை. ‘ஆசையைத் துற’ என்பதற்குப் பதிலாக, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிற பொய் தத்துவங்கள் மக்களை கவர்ந்து இழுக்கிறது. பாச வேரறுத்து கடவுளோடு இணைவதே சாலச்சிறந்தது என்கிற மெய்யியல் தத்துவம் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கவில்லை. அதனைக் கொண்டு சேர்க்கிற பணியினைச் செய்யத்தான் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவை தென்குமரி தமிழ்ச் சங்கம் அழைத்து வந்துள்ளது.

அன்னப்பறவைக்கு பாலையும் தண்ணீரையும் உணவாகக் கலந்து வைத்தாலும், அது பாலை மட்டும் பருகிவிட்டு நீரை அப்படியே விட்டுவிடும். அதுபோல தீய சிந்தனைகளையும், செயல்களையும் அப்படியே விட்டுவிட்டு கடவுளை அடைய வேண்டும். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது; விதைக்குள் செடி மறைந்திருக்கிறது. அதுபோல் மனித உயிருக்குள் கடவுள் மறைந்திருக்கிறார். மூங்கில் உரசும்போது நெருப்பு உருவாகிறது. இதையே திருமூலர், மூங்கிலுக்குள் ஒளிந்திருக்கும் நெருப்பைப்போல உயிருக்குள் உயிராக, கருவுக்குள் கருவாக கடவுள் மையம் கொண்டிருக்கிறார் என்கிறார். கடவுளைத் தேடி அலைய வேண்டியத் தேவையில்லை. உயிருக்குள் உயிராக இருக்கும் கடவுளை அறிவதே ஆன்மிகம்; திருமந்திரம்.
கீழப்பாவூர் ஆ. சண்முகையாவின், “திருமந்திரத் தமிழ் அமுதம்” மற்றும் “திருமந்திரம் தமிழ் அமுதம் – முதல் மந்திரம் ஓர் அறிமுகம்”  ஆகிய நூல்களை வெளியிட்டபோது கோட்டாறு இராசகோகிலா தமிழ் அரங்கில் முன்னூறுக்கு மேற்பட்ட நபர்கள் வருகை புரிந்திருந்தார்கள். தமிழ் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமந்திரத்தை ஆழமாக ஆய்வுசெய்து மிகத் தெளிவாக வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும், ‘திருக்குறள்’ கேசவ சுப்பையா மற்றும் ‘இலக்கியச் சோலை’ சிவ சுயம்பு ஆகியோரின் வகுப்புகளில் பத்திலிருந்து பதினைந்து நபர்களைத்தான் பார்க்க முடிகிறது.

கீழப்பாவூர் ஆ. சண்முகையாவின் நூல் வெளியீட்டின்போது கூடி வருகிறவர்களில் பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள வருகிற கூட்டமல்ல; வேடிக்கைப் பார்த்துவிட்டு இரவு உணவை உண்டு களிக்கவரும் கும்பல் என்றுதான் கருத இடம் இருக்கிறது. ‘சாப்பாடு தீர்ந்துபோச்சு. வந்தவர்களை சரியாகக் கவனிப்பதில்லை. இப்படியா கூட்டம் நடத்துவது” என்று ஒருவர் என்னிடம் கூறிச்சென்றார். அவ்வாறு சொன்னவர் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர். இந்த உடலால் நாம் பெறுவது சிற்றின்பமே. பேரின்பம் என்பது இறைவனோடு இணைதல் என்கிற தத்துவம் திருமந்திரத்தை வாசித்தால்தானே தெரியும்.

கீழப்பாவூர் ஆ. சண்முகையா எழுதியிருக்கிற மேற்படி இரு நூல்களும் திருமந்திரத்தை இன்னும் ஆழமாக கற்பதற்கு தூண்டுகின்ற நூல். அது உங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்ற ஒர் அறிமுக நூல். அப்பணியை அவர் கச்சிதமாகவே செய்திருக்கிறார். அந்நூலை வாசிப்பவர்களுக்குத்தான் திருமந்திரத்தை இன்னும் கற்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். அவ்வாறு தோன்றியவர்கள்தான் கேசவ சுப்பையா மற்றும் சிவ சுயம்பு ஆகியோர் நடத்தும் திருமந்திரம் வகுப்புகளில் வந்து அமருவார்கள். அவர்களும் கட்டணமின்றி திருமந்திர வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கரு இல்லாத முட்டையும், குரு இல்லாத வித்தையும் பயனற்றவை. திருமூலருக்கு குருவாக நந்தியாகிய சிவபெருமானே இருந்து உபதேசித்தார். மாணிக்கவாசகருக்கு சிவனே உபதேசம் செய்தார். கடவுளின் செல்லப்பிள்ளையாக ஞானசம்பந்தர் வாழ்ந்தார். அவர்களுக்கு குருவாக இருந்தவர் அகில உலகை ஆளும் சிவமாகிய கடவுள். எல்லோருக்கு அப்பாக்கியம் கிடைப்பதில்லை. இருப்பினும், பாரதியாருக்கு ஒர் குள்ளசாமியும், விவேகானந்தருக்கு ஒர் இராமகிருசுணரும் குருவாக இருந்ததுபோல் நாமும் ஒருவரை குருவாக, ஆன்மிக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

குருவானவர் ஒரு சூரிய காந்தக்கல். எங்கோ தொட முடியாத உயரத்தில் இருக்கும் சூரிய ஆற்றலை, சூரிய காந்தக்கல் எடுப்பதுபோல ஆனந்த ஒளியாகத் திகழும் இறையாற்றலை குரு வழியாகப் பெற முடியும் என திருமூலர் உரைக்கிறார். மழையில் இரு பாத்திரங்கள் நன்றாக நனைகின்றன. சுட்ட மண் பாத்திரமோ அப்படியே இருக்கிறது. சுடாத மண் பாத்திரமோ கரைந்து, இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது. சுட்ட மண் பத்திரமாக மாற வேண்டுமென்றால் கடவுளின் அருள் வேண்டும். அதனை அடைவதற்கு வழிகாட்டியாக குரு வேண்டும். குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் திருமந்திரத்தை ஆத்மார்த்தமாகப் போதிப்பதன் மூலம் கேசவ சுப்பையா

திருமந்திரம், தமிழர் மத்தியில் பரவிட வேண்டும் என்பதற்காக 200 பக்கங்கள் நிறைந்த மேற்படி நூலை வெறும் 30 ரூபாய்க்கு கொடுத்து வருகிறார்கள். தமிழர்கள், திருமந்திரத்தை வாழ்வின் மந்திரமாகக் கொண்டால் தமிழர் பூமியானது தலையாய பூமியாக விளங்கும். இப்பணியை துடிப்புடன் செய்துவரும் வழக்கறிஞர் இராசகோபால் உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியவர். ஒவ்வொரு தந்திர நூல்களையும் சிறப்பாக செய்துவரும் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவை வாழ்த்துகிறேன். எந்தவொரு இலாப நோக்கமின்றி நேரத்தையும் பணத்தையும் அவர்கள் செலவு செய்வது இறையருளால் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடே. அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் வெளியிடும் நூல்களை அர்த்தத்தோடு வாசியுங்கள். வாழ்வியலின் எதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment